தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான அரசியல் மோதல், தற்போது புதிய கட்சித் தொடக்கம் வரை சென்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், ராமதாஸ் அவர்கள் சசிகலாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அன்புமணிக்கே சாதகமாக முடிவெடுத்துள்ளதால், ராமதாஸ் தரப்பு சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.
தற்போதைய சூழலில் கட்சியின் சின்னம் மற்றும் பெயர் அன்புமணியின் வசமுள்ளதால், தேர்தல் களத்தில் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்த ராமதாஸ் தரப்பு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ‘அய்யா பாசறை மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்க ராமதாஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. இதன் சுருக்கமான ‘அய்யா பாமக’ (AYYA PMK) என்ற பெயரிலேயே தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அவர்கள், இதற்கானப் பதிவு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புதிய கட்சியைப் பாமகவின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகனின் மகன் முகிலன் பெயரில் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், தேர்தல் நெருங்குவதால் மாற்று ஏற்பாடாக இந்த ‘அய்யா பாமக’ களம் காண உள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த நேரடி அரசியல் போர், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் சமூக வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
