“இதை நிறைவேற்றிவிட்டு என்னை அடக்கம் பண்ணுங்க”…. உள்ளங்கையில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த இளம்பெண்… நெல்லையில் அதிர்ச்சி….!

By Nanthini on பங்குனி 22, 2026

Spread the love

நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துயரம் தாளாமல், மகள் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கடந்த 17-ம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், அவரது உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தந்தை இறந்த வேதனையில் மனமுடைந்திருந்த ஆறுமுகத்தின் 23 வயது மகள் பேபி கனி, இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்காத விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

இறப்பதற்கு முன்னதாக அந்த இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம் மற்றும் அவரது உள்ளங்கையில் எழுதியிருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், “தந்தை இறந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை; எனது உறவினர் ஒருவரே இதற்கு காரணம், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கடிதத்தில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றிய பின்னரே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

இந்த இரட்டை மரணங்களால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தந்தை கொலை செய்யப்பட்ட நிலையில், மகளும் தற்கொலை செய்துகொண்ட இந்த துயரச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.