பெங்களூருவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவருக்கு முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவர், வீடியோ காலில் பேசிய அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாகப் பதிவு செய்து மிரட்டியுள்ளார். இந்த வீடியோவை வைத்து மிரட்டி அந்தப் பெண் முதியவரிடம் பணம் பறிக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய வீடியோ வெளியாகிவிடும் என்ற பயத்தில், முதியவர் முதற்கட்டமாக ரூ. 2 லட்சத்தை அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியபோது தன்னிடம் பணம் இல்லை என்று முதியவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், முதியவரின் அந்தரங்க வீடியோக்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.
வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசாரித்தபோது, முதியவர் நடந்த உண்மைகளைக் கூறியுள்ளார். இது குறித்து அவரது மருமகள் கடந்த மார்ச் 3-ஆம் தேதி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். ஆன்லைன் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
