வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். முரளி, தேவயானி நடிப்பில் இவர் இயக்கிய ‘பூமணி’, ‘கிழக்கும் மேற்கும்’ போன்ற படங்கள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன.
கார்த்திக், தேவயானி, ராம்கி ஆகியோர் நடித்த தனது நான்காவது படமான ‘நிலவே முகம் காட்டு’ பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்திக் தனக்குப் பல வழிகளில் பெரிய பிரச்சினைகளைக் கொடுத்ததாக களஞ்சியம் கூறியுள்ளார்.
கார்த்திக் பொதுவாகப் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார் என்று பலரும் புகார் கூறும் நிலையில், “மற்றவர்களுக்கு என்ன செய்தாரோ அதைவிட ஒருபடி அதிகமாகவே எனக்குச் செய்தார்” என்று களஞ்சியம் தெரிவித்துள்ளார். காலை 7 மணி ஷெட்யூல் என்றால், அவரது கார் 12 மணிக்குத்தான் வரும் என்றும், அதில் இருந்து மேக்கப் மேன் வந்து, “அவருக்கு வயிற்று வலி, நாளை வைத்துக்கொள்ளலாம்” என்றும் கூறுவார்.
கார்த்திக் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்கத் தயாரிப்புத் தரப்பு கூறியபோதும், தான் அடம் பிடித்துக் கார்த்திக்கை நடிக்க வைத்ததால், அவரது செயல்பாடு தனக்குக் குற்ற உணர்ச்சியைத் தந்ததாகவும் களஞ்சியம் வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், மைசூரில் யூனிட்டைச் சந்திக்க வருவதாகக் கூறி, இயக்குநர் அங்கு விமான டிக்கெட் எடுத்த பிறகு, தான் அங்கிருந்து வந்துவிட்டதாகக் கூறி படக்குழுவை ஏமாற்றிய சம்பவத்தையும் களஞ்சியம் கூறியுள்ளார்.
