“உங்க மகன் மேல கேஸ் இருக்கு!”… வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கூகுள் பே-யில் லட்சங்களை சுருட்டிய போலி போலீஸ்.. சென்னையில் பகீர் சம்பவம்…!!

By Muthu Mani on வைகாசி 29, 2026

Spread the love

சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த 53 வயது பெண்மணி செல்வி என்பவரின் வீட்டில், கடந்த மே 23-ம் தேதி இரவு தங்களைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூறிக்கொண்டு இரு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். செல்வியின் மகன் டெல்லியில் பணியாற்றி வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரிடம், “உங்கள் மகன் மீது போதைப்பொருள் வழக்கு இருக்கிறது; அவனைக் கைது செய்யாமல் இருக்க 1 லட்சம் ரூபாய் தர வேண்டும்” என மிரட்டியுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று செல்வி கூறியதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் அவரிடமிருந்த தங்கக் கம்மல் மற்றும் மோதிரங்களைப் பறித்துச் சென்றதோடு, பின்னர் தொலைபேசி வாயிலாக மிரட்டி ‘ஜி-பே’ (G-Pay) மூலம் மேலும் 50 ஆயிரம் ரூபாயையும் பறித்துள்ளனர்.

இந்த நூதனப் பறிப்புச் சம்பவத்தால் சந்தேகமடைந்த செல்வி, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் விளைவாக, செல்வியை மிரட்டிப் பணம் மற்றும் நகைகளைப் பறித்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் சுகுமார் (43) மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த சக்திவேல் (33) ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் அவர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டது.

   

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. கைதான பிரவீன் சுகுமார் என்பவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ஒரு ஊர்க்காவல் படை (Home Guard) வீரர் ஆவார்; இவரது தந்தை ஒரு ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு குற்றவாளியான சக்திவேல் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர் என்பதால், அவரிடம் பிரவீன் சுகுமார் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திய சக்திவேல், செல்வியின் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாகத் தவறான தகவலைக் கூறி, பிரவீன் சுகுமாருடன் சேர்ந்து போலீஸ் போல் நடித்து இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.