நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிதேஷ் ராணா என்பவரின் மனைவி சஞ்சல் ராணா, திருமணத்திற்குப் பிறகும் தனது பழைய காதலனுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஹிதேஷ் கண்டித்த நிலையில், சமாதானம் பேசுவதற்காக அந்த இளைஞர் தனது மற்றொரு பெண் தோழியுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஹிதேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில், ஹிதேஷ் மற்றும் சஞ்சல் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த இளைஞரையும் அவருடன் வந்த பெண்ணையும் ஹாக்கி மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டனர். அதிகாலை 3 மணியளவில், தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற இருவரும் ஜன்னல் வழியாகக் கீழே குதித்ததாகக் காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவருடன் வந்த பெண் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ஹிதேஷ் மற்றும் சஞ்சல் ராணாவை காவல்துறையினர் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். தனிப்பட்ட மோதல் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
