ஈரானின் குட்ஸ் படைத் தலைவர் இஸ்மாயில் கானி, அந்நாட்டுப் புரட்சிகர காவல் படையினரால் (IRGC) கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வரும் பரபரப்புச் செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ உடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த ரகசிய இடத்தை இஸ்ரேலுக்குக் காட்டிக் கொடுத்ததில் கானிக்கு முக்கியப் பங்கு இருந்ததாகப் பரவலாகப் பேசப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து அவர் நூலிழையில் தப்பி வந்ததும், தற்போது அவர் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் முக்கிய ராணுவப் பொறுப்பில் இருந்த ஒருவரே காட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையின் நம்பகத்தன்மை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து ஈரான் அரசு தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
