“பாட்டிலுக்கு ரூ.20 கூடுதல் விலை.. நள்ளிரவு 9:30 மணிக்கு”.. களத்தில் குதித்த தவெக MLA.. டாஸ்மாக் கடையில் நடந்த அதிரடி வேட்டை.!

By Nanthini on வைகாசி 18, 2026

Spread the love

ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் இரவு நேரத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில், மதுப் பிரியர்களிடம் பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலிப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினருக்கு இரவு 9:00 மணி அளவில் தொலைபேசி வாயிலாக ரகசிய தகவல் கிடைத்தது.

   

புகார் கிடைத்த அடுத்த அரை மணி நேரத்திற்குள், அதாவது இரவு 9:30 மணி அளவில், சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். மூலப்பாளையம் மட்டுமின்றி, அதனை ஒட்டியுள்ள எலவமலை மூலப்பாளையம் மற்றும் சித்தோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கும் அவர் திடீர் விசிட் அடித்தார். சட்டமன்ற உறுப்பினரைக் கண்டதும் அங்கு மது வாங்கக் குவிந்திருந்த மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரிடம் திரண்டு வந்து, “இங்குள்ள கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கட்டாயமாக 20 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள், நியாயம் கேட்கும் நபர்களுக்கு மதுபானம் தருவதில்லை” என்று தங்களது புகார்களை அடுக்கினார்கள்.

இதனையடுத்து, கடைகளுக்குள் சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன், அங்கிருந்த விற்பனையாளர்களிடம் கூடுதல் விலை வசூலிப்பது குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு விற்பனையாளர்கள், தாங்கள் அரசு நிர்ணயித்த விலையைத் தான் வாங்குவதாகக் கூறி முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததால், அங்கிருந்த பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு உருவானது. அந்தச் சமயத்தில், அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திரண்டிருந்த பொதுமக்களை அமைதிப்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

   

பின்னர் டாஸ்மாக் ஊழியர்களிடம் கடுமையான தொனியில் எச்சரித்த சட்டமன்ற உறுப்பினர், ஏழை எளிய மக்களிடம் இவ்வாறு முறைகேடாகப் பணம் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசு நிர்ணயித்த விலையைத் தவிர ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும், இந்த முறைகேடு தொடர்பாக ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கூடுதல் விலை வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தகவல் கிடைத்த அரை மணி நேரத்திற்குள் நள்ளிரவு என்றும் பாராமல் நேரில் வந்து ஆய்வு நடத்திய தவெக சட்டமன்ற உறுப்பினரின் இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.