அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த அதிருப்தியுடனும் ஆவேசத்துடனும் பேசியிருப்பது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலிலேயே சமூக வலைதளங்களில் முதன்முதலாக ஐடி விங்கை உருவாக்கிய பெருமை அதிமுகவிற்கு உண்டு. ஆனால், சமீபகாலமாக திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) போன்ற கட்சிகள் டிஜிட்டல் தளங்களில் காட்டி வரும் அதிவேக பாய்ச்சலுக்கு இணையாக அதிமுக ஐடி விங் செயல்படவில்லை என்ற ஆதங்கம் எடப்பாடி பழனிசாமியிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வந்துள்ளது. கட்சியின் டிஜிட்டல் ரீச் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யனிடம் அவர் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இனிமேலும் ஐடி விங்கில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் சும்மா இருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்று அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு, அதிமுகவின் சாதனைகளையும், தற்போதைய அரசின் தோல்விகளையும் மக்களிடம் தீவிரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். புதிய கட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதிமுகவின் டிஜிட்டல் பங்களிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய கட்டாயம் குறித்து அவர் விரிவாக விவாதித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவாக, சமூக வலைதளங்களில் அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் ரியாக்ட் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். “எதிர்க்கட்சிகளின் தவறுகளையோ அல்லது மாறிவரும் அரசியல் சூழல்களையோ விமர்சித்து அறிக்கை மற்றும் பதிவுகளை வெளியிடுவதற்கு, என்னுடைய ஒப்புதலுக்காக யாரும் காத்திருக்க தேவையில்லை” என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு உடனுக்குடன் பதிலடி கொடுங்கள் என அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது, தொண்டர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை தந்துள்ளது.
டிஜிட்டல் அரசியலில் இழந்த தங்களது ஆதிக்கத்தை மீண்டும் பிடிப்பதில் அதிமுக தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. பொதுச்செயலாளரே நேரடியாக களத்தில் இறங்கி வேகம் காட்டியுள்ளதால், கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அதிமுக ஐடி விங் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தவெக உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சிகளின் அரசியல் சொதப்பல்களையும், மக்கள் பிரசினைகளையும் முன்வைத்து அதிமுகவினர் தங்களது டிஜிட்டல் தாக்குதலை தற்போதே தீவிரப்படுத்தியுள்ளனர்.
