அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூட்டணி விவகாரங்கள் குறித்து மிக வெளிப்படையான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தேமுதிக உடனான கூட்டணி குறித்து நிர்வாகிகள் கேள்வி எழுப்பியபோது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 14 மக்களவைத் தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக ஈபிஎஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிகமான இடங்களை ஒதுக்குவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்பதால், தேமுதிகவின் இந்த “மெகா” டிமாண்ட் கூட்டணி கணக்குகளுக்கு ஒத்து வராது என அவர் கறாராகப் பேசிய தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தரப்பில் கிடைத்த இந்த எதிர்மறையான சிக்னலைத் தொடர்ந்து, தேமுதிக தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதிமுகவுடனான கதவுகள் மெல்ல அடைபடுவதை உணர்ந்த அக்கட்சித் தலைமை, தற்போது தங்களுக்கு முன்னால் இரண்டு மாற்று வழிகளை மட்டுமே வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒன்று, ஆளுங்கட்சியான திமுகவுடன் கைகோர்ப்பது; அல்லது தமிழக அரசியலில் புதிய வரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) இணைந்து களம் காண்பது. இந்த இரு துருவங்களில் தேமுதிக எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறது என்பது வரும் நாட்களில் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
