அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) மீண்டும் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டக் கோரி, மூத்த நிர்வாகிகளான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் ரகசியமாகக் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள், கட்சியின் தலைமைப் பீடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டுள்ளார். தன்னை நேரில் சந்திக்க வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம், “பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கூறி உங்களிடம் யாராவது கையெழுத்து கேட்டால், எக்காரணத்தைக் கொண்டும் போட்டுவிட வேண்டாம்” எனத் தீர்க்கமாக அறிவுறுத்தி வருகிறார். இந்த அதிரடி உத்தரவின் மூலம், தனக்கு எதிராக உருவாகும் அதிருப்தி அலையை முளையிலேயே கிள்ளி எறிய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
