தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளை ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கி விடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.
