ரூ. 23 லட்சத்தில் இருந்து ரூ. 6.86 கோடி சொத்து?… அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து வழக்கு:…. சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் “தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2001-2006 காலகட்ட அதிமுக ஆட்சியில் கால்நடை மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 23.36 லட்சத்தில் இருந்து ரூ. 6.86 கோடியாக உயர்ந்ததாகக் கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2020 டிசம்பரில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, அவருக்குச் சொந்தமான 18 அசையா சொத்துக்களை முடக்கியது.

இந்த சொத்து முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மதுரையில் உள்ள 17 சொத்துகளின் முடக்கத்தை நீக்கியும், ஒரே ஒரு சொத்தின் முடக்கத்தை மட்டும் உறுதி செய்தும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அமலாக்கத்துறையின் இந்த சொத்து முடக்கம் சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

   

இந்த மனுவானது தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில், சொத்துகளின் மதிப்பு சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் கருதினால், அதை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டுமே தவிர, முடக்கத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்திருக்கக் கூடாது என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, இதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளிக்க கோரி வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.