![babau - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/babau.jpg)
CINEMA
யார் சொல்லியும் கேட்காத என் உயிர் தோழன் பாபு… குடி போதையில் ஸ்டண்ட் காட்சியில் நடித்து பல ஆண்டுகள் படுக்கையிலேயே கழிந்த வாழ்க்கை!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்த கலைஞர்கள் என்றாலே தமிழ்திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள். கார்த்திக், பாண்டியன், ராதா, ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா உள்ளிட்டோரை சொல்லலாம். அதேபோல் அவருடைய உதவி இயக்குநர்களும் நடிப்பு, இயக்கத்தில் வெளுத்து வாங்கியவர்கள் தான். மணிவண்ணன், பாக்யராஜ், மனோ பாலா, சித்ரா லட்சுமணன், பொன் வண்ணன், சீமான் ஆகியோரே அதற்கு சிறந்த உதாரணம் .
அப்படித்தான் பாபு என்கிற உதவி இயக்குநரையும் தன்னுடைய என் உயிர் தோழன் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகம் செய்தார். படமும் நன்றாக போனது. அடுத்து பாபு விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி என்ற படத்தில் நடித்தார், அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே குடிப்பழக்கம் இருந்ததாம்.
அப்படிதான் ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது நிதானம் இல்லாமல் இருந்த அவர் மேலே இருந்து குதிக்க வேண்டிய ஸ்டண்ட் காட்சியில் டூப் இல்லாமல் நானே குதிக்கிறேன் என சொல்லியுள்ளார். அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க குடிபோதையில் நிதானம் இல்லாமல் இருந்த அவர் யார் சொல்லியும் கேட்காமல் அந்த ஸ்டண்ட் காட்சிக்காக குதித்துள்ளார்.
முதல் டேக்கில் காட்சி எதிர்பார்த்தது போல வரவில்லை. அதனால் இரண்டாவது முறையும் அவரே குதித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு முதுகுத்தண்டில் அடிபட்டுள்ளது. வலியில் துடித்து மயக்கமான அவரை கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 6 மாதம் கோமாவில் இருந்த அவர், அதன் பிறகு கண்முழித்த போதுதான் தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதையே உணர்ந்தாராம். இதை நடிகரும் பெரும்புள்ளி படத்தின் மேனேஜருமான பாவா லட்சுமணன் சமீபத்தைய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையிலேயே தன்னுடைய வாழ்க்கையைக் கழித்த பாபு கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி இயற்கை எய்தினார். ஒரு சிறு தவறால் அவரின் மொத்த எதிர்காலமும் படுக்கையில் கழிக்கும் படி ஆனதுதான் சோகம்.