மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் மிஸ்ரா என்பவரிடம், ஓட்டுநராகப் பணிபுரியும் நோயாளி ஒருவர் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.4.25 லட்சம் ஆகும் என்பதால், குடும்பத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதே மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற விரும்பிய குடும்பத்தினர், செலவைக் குறைக்க முடியுமா எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறுநாளே, அந்த ஓட்டுநரின் முதலாளி அறுவை சிகிச்சைக்குத் தேவையான முழுத் தொகையையும் வங்கி மூலம் செலுத்தி உதவியுள்ளார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததும், மருத்துவர் அவருக்கு நன்றி தெரிவிக்க அழைத்தபோது, “அவர் என் உடன் பணியாற்றும் சக ஊழியர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாகப் பணியாற்றுகிறோம், வேலை மட்டுமே வேறு” என்று கூறி நெகிழ வைத்துள்ளார். முதலாளியின் இந்த உயரிய பண்பையும் மனிதநேயத்தையும் பாராட்டி மருத்துவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
