சென்னையிலிருந்து நியூயார்க் செல்வதற்குத் தற்போது விமானத்தில் சுமார் 20 மணிநேரம் வரை ஆகிறது. இந்தப் பயண நேரத்தைப் பெருமளவு குறைக்கும் வகையில், எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ விண்வெளிப் பயணத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட், வளிமண்டலத்திற்கு மேலே காற்றின் உராய்வு இல்லாத பகுதியில் மணிக்கு 27,000 கி.மீ வேகத்தில் பாயும் திறன் கொண்டது. இதன் மூலம் உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு வெறும் அரை மணிநேரத்தில் மிக எளிதாகச் சென்றடைய முடியும் என்பது அறிவியல் ரீதியாகச் சாத்தியமாகியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கடற்கரை ஓரத்தில் உள்ள ராக்கெட் தளத்திலிருந்து பயணிகள் புறப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்வெளிப் பாதையில் இலக்கை நோக்கி நகர்வார்கள். தற்போதைய சூழலில் இது சோதனை முயற்சியாக இருந்தாலும், வருங்காலத்தில் சாதாரண விமானக் கட்டணத்திலேயே (பிசினஸ் கிளாஸ்) மக்கள் பயணிக்கும் வகையில் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டுவதை விட, விண்வெளி வழியாகப் பயணிப்பதே புத்திசாலித்தனமான மற்றும் வேகமான வழி என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், காலை உணவைச் சென்னையில் முடித்துவிட்டு மதிய உணவை நியூயார்க்கில் உண்பது நிஜமாகும்.
