கணவன்-மனைவி அல்லது காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்திக் கொள்ள ஒருவருடைய பெயரை மற்றவர் உடலில் பச்சை குத்திக் கொள்வது (டாட்டூ) பல காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது பெயர்களுக்குப் பதிலாக தங்களுக்குப் பிடித்தவர்களின் புகைப்படங்களையே டாட்டூவாக வரைந்து கொள்வது புதிய நாகரிகமாக மாறி வருகிறது. ஆனால், இந்த டாட்டூ மோகம் வேலூர் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தில் பெரும் வன்முறையாக வெடித்து, கணவனை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (32). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், ஆந்திர மாநிலம் பலமநேர் பகுதியைச் சேர்ந்த பராசக்தி (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். தனியார் காலணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பராசக்தியின் நடத்தையில், கடந்த சில காலமாகவே கணவர் அஜித்துக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கணவருடன் ஏற்பட்ட கோபத்தால் சில மாதங்களுக்கு முன்பு பராசக்தி ஆந்திராவில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவியை சமாதானம் செய்து மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவதற்காக அஜித் அண்மையில் தன் மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இனிமேல் சண்டையிட மாட்டேன் என்று கூறி பராசக்தியை குடியாத்தத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போதுதான் பராசக்தியின் கையில் வேறு ஒரு ஆணின் உருவப்படம் டாட்டூவாக வரையப்பட்டிருந்ததையும், உடலின் சில இடங்களில் அந்த நபரின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததையும் அஜித் கவனித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித், பராசக்தியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். உறவினர்கள் தடுத்து நிறுத்தியும், மீண்டும் இரவு நேரத்தில் ஏற்பட்ட மோகத்தில் பராசக்தி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு பராசக்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை அடியாட்களைப் போல் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் அஜித்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
