“பஸ் எங்கே போகுது?” கேள்வி கேட்டதால் முதியவர் பலி… சென்னையில் அரசுப் பேருந்தில் நடந்த பகீர் கொடூரம்..!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

சென்னை தாம்பரம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த 74 வயது முதியவர், வாலிபர் ஒருவரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பை பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் சந்திரசேகரன், வடபழனி செல்வதற்காகத் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அமர்நாத் (25) என்ற இளைஞர், பேருந்து எங்கே செல்கிறது என்று மீண்டும் மீண்டும் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, நடத்துநர் தலையிட்டு முதியவரை முன்னிருக்கைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.

சந்திரசேகரன் எழுந்து செல்ல முயன்றபோது, ஆத்திரமடைந்த அமர்நாத் அவரது கழுத்தை நெரித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பேருந்திலேயே மயங்கி விழுந்த முதியவரைப் பயணிகள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோட முயன்ற அமர்நாத்தைச் சக பயணிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கொத்தனார் வேலை செய்து வரும் அமர்நாத்தைக் கைது செய்த குரோம்பேட்டை போலீஸார், அற்ப காரணத்திற்காக முதியவரை அடித்துக் கொன்றது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.