கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு கணவன் தனது மனைவியை மிகக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுநாத் என்பவரின் மனைவி சிவம்மாவுக்கு அரசு செவிலியர் பணி கிடைத்த பிறகு, தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் மனைவிக்கு அரசு வேலை கிடைத்ததில் மஞ்சுநாத்திற்குத் திருப்தி இல்லை என்றும், இதுவே அவர்களது பிரிவினுக்கும் மோதலுக்கும் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த மஞ்சுநாத், சிவம்மாவைக் கத்தியால் குத்திவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். படுகாயமடைந்த சிவம்மா தற்போது மருத்துவமனையில் உயிருடன் போராடி வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பெண்ணின் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றம், ஒரு குடும்பத்தில் இத்தகைய கோரமான முடிவுக்கு இட்டுச் சென்றது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறாமை மற்றும் புரிதல் இல்லாமை ஒரு அழகான குடும்பத்தை எப்படிச் சிதைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.
