கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு அதிரடிச் சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சீட்டுக்காக நகரச் செயலாளர் பாபு தனது மனைவி அழகுவேலுக்காக (முன்னாள் எம்.எல்.ஏ) தீவிரமாக முயற்சி செய்து வந்தார். ஆனால், கட்சித் தலைமை ராஜீவ் காந்தியை வேட்பாளராக அறிவித்ததால், கடும் அதிருப்தியில் இருந்த பாபு, மேடையிலேயே தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.
வேட்பாளர் கூட்டத்தில் மைக் பிடித்த பாபு, மிகுந்த மன உளைச்சலுடன் உருக்கமாகப் பேசினார். “நான் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்; இனி நகரச் செயலாளர் பதவியில் பணியாற்றும் சூழலில் என் உடல்நிலை இல்லை” என்று கூறியவர், மேடையில் அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர் குமரகுருவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அதிரடியாக வழங்கினார். பின்னர் அங்கிருந்தவர்களை வேதனையுடன் விழுந்து கும்பிட்டுவிட்டு, பாதியிலேயே அரங்கிலிருந்து வெளியேறியது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
பாபுவின் மனைவியும் மாவட்ட மகளிர் அணித் தலைவருமான அழகுவேலுவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2011-ல் எம்.எல்.ஏ-வாக இருந்த அழகுவேலுவுக்கு கடந்த முறையும் சீட் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைக்காததே இவர்களின் இந்தத் தீவிர முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளது கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
