அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் சி.வி. சண்முகம் (CVS) அணிகளுக்கு இடையேயான உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், CVS அணியில் இருக்கும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மீண்டும் ஈபிஎஸ் பக்கம் திரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அமைச்சரவையில் தங்களுக்கு முக்கிய இடங்கள் கிடைக்கலாம் என அதிருப்தியாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அங்கு அவர்களுக்கு இடமில்லை என்று உறுதியான தகவல்கள் வெளியாகியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகத் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, “அவர்கள் (தவெக) பக்கம் சென்றால் எதுவும் கிடைக்காது என்று நான் தான் முன்னாடியே சொன்னேனே, எனவே வீண் பிடிவாதத்தை கைவிட்டு மீண்டும் என் பக்கமே வந்துவிடுங்கள்” என்று ஈபிஎஸ் அன்போடு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் அதிமுகவிலிருந்து ஏற்கனவே பல அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நீக்கப்பட்டும், கொறடா உத்தரவை மீறியதாகத் தகுதிநீக்கப் புகார்கள் அளிக்கப்பட்டும் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தவெகவிலும் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், தங்களது அரசியல் எதிர்காலத்தைக் கருதி அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவின் தாய் கழகத்திற்கே திரும்பும் மனநிலைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
