தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் கட்சி நிகழ்வின் போது உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாததை அதிமுக மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன்முறையாக, உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரிக்காமல், பாதிக்கப்பட்டவர்களைத் தனது பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் பெற வைத்தது ‘வேற லெவல் பண்ணையார்தனம்’ என்று அதிமுக விமர்சித்துள்ளது. இதற்காக அவருக்கு ஒரு ‘டாக்டர்’ பட்டமே கொடுக்கலாம் என்று கிண்டலடித்த அக்கட்சி, கரூருக்கு நேரில் சென்று கண்ணீரைத் துடைக்கத் துப்பில்லாதவர், கிளிசரின் கண்ணீரோடு புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தி நாடகமாடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், துக்க நிகழ்விலும் குற்ற உணர்வு ஏதுமின்றித் தன்னைச் சுய விளம்பரம் செய்துகொள்ளும் விஜய்யின் செயல், ஒரு ஆபத்தான ‘தற்பெருமை அரசியல்’ (Narcissistic Behaviour) அடையாளம் என்று அதிமுக சாடியுள்ளது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல், ரசிகர்களின் உயிரிழப்பைத் தனது அரசியல் பிம்பத்தை உயர்த்தப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், இத்தகைய சுயநலப் போக்கு தமிழக அரசியலுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் அதிமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பதிவில் மிகக் கடுமையான வார்த்தைகளால் பதிவிட்டுள்ளது.
