சென்னையில் தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் . ராயபுரம், திரு.வி.க நகர் பகுதியில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக பணியாற்றி வந்து ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளார்கள். ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சிக்கு முன்பாக போராடி வருகிறார்கள். அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இருந்தும் சுமூக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
மாநகராட்சிக்கு முன்பாக போராட்டம் நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து சமூக கூடத்தில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
வணக்கம் திரு. ஸ்டாலின் அவர்களே… கொரோனாவிலும் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து துன்புறுத்துவது நியாயம் இல்லை. தூய்மை பணியாளர்களை பல்வேறு இடங்களில் கைது செய்து சிறை வைத்துள்ளீர்கள், இது உங்களுக்கே நியாயமா? அவர்கள் ஒன்றும் நாட்டின் எதிரிகளோ, விரோதிகளோ கிடையாது , அவர்கள் ஏழை எளிய மக்கள். தூய்மைப்படுத்துவதை நிறுத்தி விட்டால் நாம் நாற்றத்திலேயே மடிந்து விடுவோம். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நேர்மாறாக செயல்படுத்துகிறீர்கள். இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராடியது ஒரு தவறா?
அவர்களுடன் போட்டோ சூட் எடுத்து போஸ்ட் போட்டீர்களே அப்போது இனித்ததா… இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியை கேட்டால் குத்தமா? நீங்கள் எழுதிய கடிதத்தை மறந்து விட்டீர்களோ? அது வெறும் நாடகமோ? இதுவரை நம் நாட்டில் இதுபோன்று நடந்ததில்லை தூய்மை பணியாளர்களை அடித்து துன்புறுத்தி சிறையில் அடைத்துள்ளீர்கள். உடனடியாக அவர்களை விடுதலை செய்து காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளியுங்கள். கொஞ்சம் ஆவது மனிதாபிமானத்தோடு செயல்படுங்கள். தூய்மை பணியாளர்களின் வேதனை, வழி, கண்ணீரைக் கண்டு தமிழ்நாடே கலங்குகிறது. ஆனால் நீங்களோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இவர்களது கண்ணீருக்கு பதில் சொல்ல வெகுதூரம் ஒன்றுமில்லை 8 மாதங்கள் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
