உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 4) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னையில் நடைபெற்ற தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியின் போது எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குப் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்குச் சென்று எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தார்.முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று எச்.ராஜாவின் நலம் குறித்து விசாரித்தனர். எச்.ராஜாவின் உடல்நிலை தற்போது சீராக (Stable) உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
