சேலம் மாவட்டம் வீரகனூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். தான் சசிகலாவின் காலில் விழுந்ததை உதயநிதி சுட்டிக்காட்டியதற்கு, “ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கும்போது ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு; பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்று எம்.ஜி.ஆர் பாடலே இருக்கிறது” என நியாயப்படுத்தினார். மேலும், தனது 51 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரையும் தரக்குறைவாகப் பேசியதில்லை என்றும், தன்னைப்பற்றித் தவறாகப் பேசினால் சும்மா விடமாட்டேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் திடீர் பல்டி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்பு சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சித்ததோடு, “அவரால் நான் முதல்வர் ஆகவில்லை, எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுத்ததால்தான் முதல்வர் ஆனேன்; அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இப்போது அதே சசிகலாவிடம் ஆசி பெற்றதை “தமிழர் பண்பாடு” என அவர் நியாயப்படுத்துவதை நெட்டிசன்கள் பழைய வீடியோக்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
