சொத்து குவிப்பு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை (ED) தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் மாதம் அனுப்பப்பட்ட முதற்கட்ட கடிதத்திற்கு மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், தற்போது தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு இந்த புதிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்ட இந்தக் கடிதம், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், பின்னர் திமுகவில் இணைந்தார். முந்தைய மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியைப் பறிகொடுத்த நிலையிலும், திருச்செந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2013-ஆம் ஆண்டில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர் மீது பதிவு செய்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை தற்போது தனது பிடியை இறுக்கியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் அமலாக்கத்துறை மிகக் கடுமையான சட்ட விதிகளையும், காலக்கெடுவையும் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மாநில அரசு வழக்குத் தொடர அனுமதி அளிப்பது பற்றி முடிவெடுக்காவிட்டால், புதிய சட்டமான பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை நேரடியாக நீதிமன்றத்தை அணுக முடியும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மாநில அரசு 120 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை தமிழக அரசு இந்த 120 நாட்களுக்குள் தகுந்த பதிலையோ அல்லது அனுமதியையோ வழங்கத் தவறினால், அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவே (Deemed Sanction) கருதப்படும் என்றும் அமலாக்கத்துறை அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை நோக்கி அமலாக்கத்துறை நகரத் தயாராகி வருவதால், அனிதா ராதாகிருஷ்ணன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது தீவிர சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் என்ற பரபரப்பான சூழல் தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.
