சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய 5 இடங்களில் இந்தச் சோதனையானது ஒரே நேரத்தில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் பிரபல பைனான்சியர் ஒருவரைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, அந்த பைனான்சியரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் தீவிர ஆவண சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று, அதை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
