“ஒரு இயக்கம்.. இன்னொரு சின்னத்துல நிக்கவே கூடாது..!” – திமுகவை நேரடியாக அட்டாக் செய்த துரை வைகோ…!

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது ஒரு ‘துரதிர்ஷ்டவசமான செயல்’ என்றும், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கினார். மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் போது ஒரு கட்சி தனது தனித்துவத்தையும் அடையாளத்தையும் முழுமையாக இழந்துவிடுகிறது என்று அவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

ஒரு வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால், அவர் முதலில் தனது சொந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அதன்பின் எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறாரோ, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துதான் போட்டியிட முடியும் என்றும் அவர் விவரித்தார். இந்த நடைமுறை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தலைமை ஏற்க மறுத்தாலும் கூட இனிவரும் காலங்களில் ஓர் இயக்கம் மற்றொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைத்தார்.

   

தவெக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் தற்போதைய கூட்டணிக் கணக்குகளுக்கு மத்தியில் மதிமுகவின் இந்த கருத்து உற்றுநோக்கப்படுகிறது. துரை வைகோவின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “சொந்த சின்னத்தில் போட்டியிட விருப்பம் இல்லை எனில் அப்போதே அதில் உறுதியாக நின்றிருக்க வேண்டும், யாராலும் அந்த நிலைப்பாட்டை மாற்றியிருக்க முடியாது; ஆனால், அப்போது கூட்டணிக்கும் சீட்டுக்கும் ஒப்புக்கொண்டுவிட்டு, இப்போது வந்து துரதிர்ஷ்டம் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?” என திமுகவினர் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.