மகாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, சதாரா மாவட்டத்தின் காம்கான் கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வசித்து வந்த சதீஷ் (45) என்ற நபர், அதிகாலையில் தன் வீட்டின் அருகே எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்துள்ளார். அவர் மின்சாரம் தாக்கித் துடித்ததைக் கண்டு, அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி கங்குபாய் (40), மகன் சச்சின் (26) மற்றும் மகள் ஆர்த்தி (24) ஆகியோரும் அடுத்தடுத்து மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தற்போது மகாராஷ்டிரா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மரங்கள் முறிந்து விழுந்து மின்வயர்கள் அறுந்து விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, லோனாவா மலைப்பகுதியில் பெய்த வரலாறு காணாத மழையினால் கடுமையான வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தற்போதைய விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பால்டன் பகுதி காவல்துறையினர், சதீஷின் வீட்டின் முன்பு மின்வயர்கள் எப்படி அறுந்து விழுந்தது, இதில் யாருடைய கவனக்குறைவு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
