திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்த பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரை போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளனர். திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கிச் சென்ற நகரப் பேருந்தில் ஏறிய சில பெண்கள், குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்க நடத்துனரிடம் பயணச்சீட்டு கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர்கள், “இரண்டு பேருந்து நிறுத்தங்களுக்கு ஏன் நடக்க முடியாது? உங்களுக்கு டிக்கெட் தரமாட்டோம், நேரடியாகப் பணிமனைக்கு அழைத்துச் சென்று அபராதம் விதிக்கச் செய்வோம்” என மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய திருப்பூர் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பெண் பயணிகளிடம் தரக்குறைவாகப் பேசிய குற்றத்திற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரையும் அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். தமிழக அரசு பெண்களுக்காகக் கொண்டு வந்த விடியல் பயணத் திட்டத்தின் கீழ் இலவசமாகப் பயணிக்கும் பெண்களைச் சில பேருந்து ஊழியர்கள் அவமதிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமும், குறிப்பாக பெண் பயணிகளிடமும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
