உடம்பெல்லாம் வியர்வை….! அசௌகரியமாக இருந்த பயணியை பார்த்து சுதாரித்த நடத்துனர்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தைச் சேர்ந்த அன்னூர் கிளையில் ஓட்டுநராக சசிகுமார் (48) மற்றும் நடத்துநராக தினேஷ்குமார் (33) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அன்னூர் – காந்திபுரம் (45 சி) வழித்தடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஆண் பயணிக்குக் கோவில்பாளையம் அருகே திடீரென அதிக வியர்வை வெளியேறுவதை நடத்துநர் தினேஷ்குமார் கவனித்தார்.

பயணி தனக்குச் சிரமம் இல்லை என்று கூறிய போதும், உடல்நலக் குறைபாடு இருப்பதை உணர்ந்த தினேஷ்குமார், உடனடியாக அவருக்குத் தண்ணீர் கொடுத்து, மருத்துவமனைக்குச் செல்ல வற்புறுத்தினார். இதனையடுத்து, ஓட்டுநர் சசிகுமாரிடம் தகவல் தெரிவித்த தினேஷ்குமார், பஸ்ஸை அங்கே இருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறினார்.

   

குறும்பபாளையத்தில் சென்றுகொண்டிருந்த பஸ் உடனடியாகத் திருப்பப்பட்டு இரவு 7:45 மணிக்கு மருத்துவமனை வளாகத்தை அடைந்தது. அங்கு மருத்துவக் குழுவினர் பயணிக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்தனர். அப்போது பஸ்ஸில் இருந்த 19 பயணிகளும் காலதாமதம் ஏற்பட்டாலும் முழு ஒத்துழைப்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர்.

   

பயணிக்கு உதவி செய்த பின்னர், 25 நிமிடங்கள் தாமதமாகப் பஸ் காந்திபுரம் சென்றடைந்தது. மனிதநேயத்துடன் செயல்பட்ட ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் தினேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.