தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் மகளிர் நலத்திட்டங்களுக்கான நிதி உதவி கணிசமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய திமுக அரசு மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் பட்சத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய், 2,000 ரூபாயாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம் மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
மறுபுறம், அதிமுக ஆட்சி அமைந்தால் ‘குல விளக்குத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களால், தகுதியுள்ள ஒரு குடும்பத்திற்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக மாதம் 5,000 ரூபாய் வரை நிதி உதவி கிடைக்கப் பெற வழிவகை பிறக்கும். இந்த அறிவிப்புகள் தேர்தல் களத்தில் மகளிரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
