“நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?”… 4 கிலோமீட்டர் இடைவெளியில் இரண்டு சடலங்கள்…. மதுரையை உலுக்கிய இரட்டை கொலை…!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் அருகே “நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா?” என்ற கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 3-ம் தேதி மதுரை விமான நிலையம் அருகே சம்பக்குளம் விலக்கு பகுதியில் முகம் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் உடலும், அடுத்த சில மணி நேரங்களில் நிலையூர் அருகே கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன் மற்றொரு உடலும் கண்டெடுக்கப்பட்டன. முதலில் விபத்து என கருதப்பட்ட நிலையில், உடல்களில் இருந்த வெட்டுக்காயங்கள் மற்றும் நான்கு கிலோமீட்டர் இடைவெளியில் சடலங்கள் கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்த ஆஸ்டின்பட்டி போலீசார், இதனை இரட்டை கொலையாகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

திருமங்கலம் ஏ.எஸ்.பி. அன்சூல் நாகர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், செல்போன் சிக்னல் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் நிலையூரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பாண்டிதுரை தலைமையிலான கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அழகு சேதுபதி, வசந்த், கோடீஸ்வரன், பாண்டிதுரை, சங்கீத், ராஜவேல், விஷ்வா, கருப்பு ராஜா, தினேஷ் மற்றும் கலையரசன் ஆகிய 10 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் வாடிப்பட்டியைச் சேர்ந்த மவுவன் (29) மற்றும் அவரது நண்பர் பத்மநாதன் (25) என்பது உறுதி செய்யப்பட்டது.

   

கொலையுண்ட மவுவன் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், கைது செய்யப்பட்ட சேதுபதி தரப்பினருக்கும் இடையே ரவுடிசத்தில் யார் பெரியவர் என்ற போட்டி நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “சமரசம் செய்து கொள்ளலாம்” என நயவஞ்சகமாக ஆசை வார்த்தை கூறி, மவுவன் மற்றும் பத்மநாதனை சேதுபதி கும்பல் வரவழைத்துள்ளது. இதனை நம்பி அங்கு வந்த அவர்களை ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளது.

   

சம்பவத்தன்று பத்மநாதனை முதலில் வெட்டிய கும்பலிடமிருந்து மவுவன் தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் துரத்திச் சென்ற கும்பல், வண்ண பாறை அருகே அவரை வழிமறித்துக் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. கொலையாளிகள் சடலங்களை வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டுச் சென்றது விசாரணையில் அம்பலமானது. கைது செய்யப்பட்ட 10 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதிகாரப் போட்டிக்காக அரங்கேறிய இந்த இரட்டை கொலை சம்பவம் மதுரையில் மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.