ஹார்முஸ் ஜலசந்தியில் இடப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் முழுமையாக அகற்றப்பட்டு அல்லது அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படை தனக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இதனை உறுதிப்படுத்திய அவர், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (TruthSocial) சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், இனிவரும் நாட்களில் கடலில் மீண்டும் கண்ணிவெடிகளைப் புதைக்க முயலும் எந்தவொரு கப்பலும் அமெரிக்க ராணுவத்தால் உடனடியாக அழிக்கப்படும் என மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளிப் படை இந்த நீர்வழிப்பாதையின் ஒவ்வொரு அங்குலத்தையும், மூலையையும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ‘பிக்காக்ஸ் மலை’ என்று அழைக்கப்படும் பகுதியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார். அசோசியேட்டட் பிரஸ் தகவலின்படி, அதிகாரப்பூர்வமாக ‘குஹ்-இ-கொலாங் கஜ் லா’ என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதி, ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகே பூமிக்கு அடியில் மிக ஆழமாகக் கட்டப்பட்டு வரும் ஒரு முக்கிய அணுசக்தித் தளமாகும்.
முன்னதாக அமெரிக்காவால் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் மூன்று அணுசக்தித் தளங்களையும் அமெரிக்க ராணுவம் கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவித்த ட்ரம்ப், கடல் வழிகளில் கண்ணிவெடிகளைப் புதைப்பதற்கு எதிராக அமெரிக்கா “சகிப்புத்தன்மையற்ற கொள்கையை” உறுதியுடன் பின்பற்றும் என்றார். அத்துடன், ஈரான் அரசு தற்போது ஒரு மாபெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், பொருளாதாரச் சீரழிவால் தங்களின் சொந்த ராணுவத்திற்கே சம்பளம் கொடுக்க முடியாமல் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது ஈரானில் அரசிற்கு எதிராகப் போராடும் பொதுமக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொல்லப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த மனிதாபிமான நெருக்கடி உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சர்வதேச அளவில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் மீதான அழுத்தத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் சூழலில், ட்ரம்பின் இந்த ஹார்முஸ் எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
