ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய அடையாள அட்டையை அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. திருநங்கையர் நலனுக்கான தேசிய இணையதளம் மூலம் பெறப்படும் இந்தச் சான்றிதழ், இனி இ.பி.எஃப் பதிவுகளில் திருத்தங்கள் செய்யச் செல்லுபடியாகும். ஏற்கனவே இதற்காக நடைமுறையில் உள்ள 18 வகையான ஆவணங்களின் பட்டியலில், தற்போது இந்த அடையாள அட்டையும் ஒரு முக்கிய அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கையர் சமூகத்தைச் சேர்ந்த பி.எஃப் உறுப்பினர்கள், தங்களது தனிப்பட்ட விவரங்களை மாற்றிக் கொள்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, மிக எளிதாகவும் விரைவாகவும் சேவைகளைப் பெற முடியும். பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுக்கு இணையாக இந்த அடையாளச் சான்றிதழும் இனி பி.எஃப் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
