பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், பாட்னா மண்டல ஆணையரின் மனைவிக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற அரசு மருத்துவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆணையரின் மனைவி தனது தாயுடன் முண்டேஸ்வரி கோயிலுக்குச் சென்று திரும்பியபோது, மலைப்பாதையில் அவர் காலில் முள் குத்தியுள்ளது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக சதர் மருத்துவமனையின் செயல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசித் ரஞ்சன் தலைமையிலான மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது. சிகிச்சையின் போது அந்த மருத்துவரின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவர் மது அருந்தியிருப்பதாக ஆணையரின் மனைவி மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் (DM) உத்தரவின் பேரில், சிவில் சர்ஜன் அலுவலகத்தில் வைத்து மருத்துவருக்கு மதுப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட டாக்டர் அசித் ரஞ்சன், சிறிது நேரம் அங்கு காத்திருந்த நிலையில், திடீரென ஏதோ ஒரு காரணத்தைக் கூறிவிட்டு தனது காரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், இந்த மருத்துவர் ஏற்கனவே பணியின் போது மது அருந்திய விவகாரத்தில் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட சிவில் சர்ஜன், டாக்டர் அசித் ரஞ்சனிடம் இது குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருத்துவர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், சுகாதாரத் துறையின் விதிகளின்படி அவர் மீது கடும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், ரத்த மாதிரி எடுக்கக் குழுவினர் வராததாலேயே தான் அங்கிருந்து சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
