“குழந்தை எங்களை மாதிரி இல்லையே”…. சந்தேகப்பட்டு DNA டெஸ்ட் எடுத்த தம்பதி… பெற்றெடுத்த தாய்க்கே காத்திருந்த பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பிரபல ஐவிஎஃப் (IVF) செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்ட தம்பதிக்கு, அவர்கள் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகள் தங்களது சொந்த குழந்தைகள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் டிஎன்ஏ பரிசோதனையில் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு ராகுல் ரத்தோர் மற்றும் அவரது மனைவி இந்த மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அந்தப் பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அதில் ஒரு குழந்தை தங்களைப்போல் இல்லாமல், வடகிழக்கு இந்தியர்களின் சாயலில் இருந்ததால் தம்பதியினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், அந்த இரட்டை குழந்தைகள் இருவருமே உயிரியல் ரீதியாக அவர்களுக்குப் பிறக்கவில்லை என்ற கசப்பான உண்மை தெரியவந்துள்ளது.

   

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதியினர் காவல்துறையில் புகார் அளித்தும், கடந்த மூன்று மாதங்களாக எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே கடந்த மார்ச் 31 அன்று இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜூன் 5 அன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட அந்த ஐவிஎஃப் மையத்தில் உள்ள கருப்பதிவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

   

ஏற்கனவே மூன்று முறை சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்த தாய், உடல்நலம் தேறுவதற்குள் பிரசவித்த சில நாட்களிலேயே காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் இந்த அலட்சியத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்தத் தாய், “நான் ஒன்பது மாதம் சுமந்து, பிரசவித்து குழந்தைகளைப் பெற்றெடுத்தேன். ஆனால், எங்களின் சொந்த குழந்தைகள் எங்கே? மருத்துவமனையின் இந்த இமாலயத் தவற்றிற்கு யார் பொறுப்பு?” என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளது ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது.