தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள் 113 பேர் மொத்தமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நோக்கிய தங்களது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். திமுகவில் உள்ள சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்களில், இந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் திடீர் முகாம் மாற்றம் அறிவாலய வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் சுவடுகள் மறைவதற்குள் ஏற்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த பின்னடைவுகள், திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் மிரட்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவின் தேர்தல் தோல்விக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு பலவீனங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, தவெக தலைமை இந்த ரகசிய ஆபரேஷனை மிக நேர்த்தியாக அரங்கேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கும் இந்த 113 ஒன்றியச் செயலாளர்களின் வெளியேற்றம், கட்சியின் அடித்தளத்தையே பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியைக் காட்டிலும், அடிமட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் மாற்று முகாமிற்குத் தாவியிருப்பது திமுக தலைமைக்கு கடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உள்கட்சித் துரோகிகளைக் கண்டறியும் உளவுப் பணிகளையும் முடுக்கிவிடச் செய்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும், மேற்கொண்டு சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக, திமுகவின் அவசர பொதுக்குழுவைக் கூட்டி, உடனடியாக உள்கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் கட்சிக்கு விசுவாசமற்றவர்களைக் கண்டறிந்து நீக்கிவிட்டு, புதிய மற்றும் நம்பிக்கையான முகங்களை கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்த அறிவாலயம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், தவெக-வின் இளைஞர் ஈர்ப்பு வியூகத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றில் 50 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, சீனியர்கள் பலரை பொறுப்புகளில் இருந்து மெதுவாக விடுவித்துவிட்டு, இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைப்பதன் மூலம் தவெக-வின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என திமுக தலைமை நம்புகிறது.
