இனி ‘ஃபேக் நியூஸ்’ போட்டா ஜெயில்தான்..! யூடியூப், இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களுக்கு.. செக் வைத்த DMK…!

By Swetha on வைகாசி 25, 2026

Spread the love

சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) திமுக மற்றும் அதன் தலைமைக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியும், சட்ட அணியும் களம் இறங்கியுள்ளன. அண்மைக்காலமாக திமுகவின் சாதனைகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் போலியான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் (TVK) சேர்ந்த ஐடிகள் மூலமாக இத்தகைய அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் கூறி திமுக தரப்பு இந்த அதிரடி சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில், போலி ஆவணங்களைத் தயாரித்தல், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் போலியான உள்ளடக்கங்களை உருவாக்குதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு முக்கிய நபர்களுக்கு எதிராகத் தமிழக டிஜிபி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் திமுக சார்பில் முறையான குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் கூறுகையில், இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள நெட்வொர்க்கைக் கண்டறியவும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்டவர்களைக் காவல் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

   

குற்றவியல் நடவடிக்கை ஒருபுறம் இருக்க, அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் பெரும் தொகைக்கான நஷ்ட ஈடு கோரி சிவில் வழக்குகளைத் தொடரவும் திமுக சட்ட அணி ஆலோசித்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லையை மீறி, போலியான செய்திகளையும் மார்பிங் வீடியோக்களையும் பரப்புவோர் மீது எவ்வித சமரசமும் இன்றி நீதிமன்றம் மற்றும் காவல்துறை மூலமாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இனிவரும் நாட்களில் அவதூறு பரப்புபவர்கள் கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் திமுக எச்சரித்துள்ளது.