தவெக vs திமுக: முதல்வரின் முதல் பயணத்திற்கே வந்த சோதனை… கரூருக்கு கிளம்பும் முன்பே விஜய்க்கு விழுந்த முட்டுக்கட்டை… புதிய பரபரப்பை கிளப்பிய திமுக….!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த 2025 செப்டம்பரில் கரூரின் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தேர்தலுக்குப் பிறகு நேரில் வந்து சந்திப்பதாக அன்று கட்சித் தலைவராக விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது முதல்வராக அந்தப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்த விழாவில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் விபத்து தொடர்பாக திமுக மற்றும் காவல்துறையை விமர்சித்து பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, கரூர் நெரிசல் சம்பவம் குறித்து தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

   

திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் விஜய், சிபிஐ விசாரணை நின்றுகொண்டிருக்கும் வேளையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திப்பது விசாரணையைத் திசைதிருப்பக்கூடும்; எனவே சிபிஐ அமைப்பின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அவரை கரூர் செல்ல அனுமதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது. இந்த முக்கிய வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசாருதீன் அமானுல்லா, ஷில் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

   

நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று இடைக்காலத் தடை அல்லது கட்டுப்பாடுகளை விதித்தால், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் முழுமையாக ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என்ற தகவல்கள் உலா வருகின்றன. முதல்வராகப் பொறுப்பேற்ற ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மிகுந்த அரசியல் முக்கியத்துவத்துடன் திட்டமிடப்பட்ட இந்த முதல் அதிகாரப்பூர்வ மாவட்டப் பயணம், திமுகவின் நீதிமன்ற நடவடிக்கையால் தடைபடும் சூழல் உருவாகியிருப்பது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.