“எனக்கும் ஒரு சீட், என் மகனுக்கும் ஒரு சீட்”… திமுகவை அதிரவைக்கும் அமைச்சர்களின் வாரிசு அரசியல்… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

By Nanthini on பங்குனி 14, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் வாரிசுகளை அரசியலில் நிலைநிறுத்தவும், செல்வாக்கை நீட்டிக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், தனது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பதிலாக அல்லது தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில் தனது மருமகளுக்குச் சீட் கேட்கிறார். அதேபோல், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது மகன் கம்பனைப் போலூர் தொகுதியில் களமிறக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டு அவர் கோரியது குறிப்பிடத்தக்கது.

   

இவர்களுடன், விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகன் கதிரவனைப் புவனகிரி அல்லது சிதம்பரம் தொகுதியில் நிறுத்த வாய்ப்பு கேட்டுள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தனது மகன் ரமேஷைச் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வைக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், அமைச்சர் காந்தி தனது மகன் வினோத்திற்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது மகன் டாக்டர் அண்ணாமலைக்கும் வாய்ப்பு கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

   

அமைச்சர்களின் இத்தகைய வாரிசு அரசியல் கோரிக்கைகள் திமுக தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வாரிசு மோகத்தில் இருப்பது, தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தலைமையின் முடிவைச் சிக்கலாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தலைமை எத்தகைய முடிவை எடுக்கும் என்பது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.