சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, கடந்த ஆட்சியில் டாஸ்மாக் மூலம் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம், தற்போது ஒவ்வொன்றாக அரசு கஜானாவிற்குள் சேர்க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். “மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம்; தொடவும் விடமாட்டோம்; இதற்கு முன் தொட்டவர்களையும் சும்மா விடமாட்டோம்” என்று அவர் திட்டவட்டமாக எச்சரித்தார். முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சுக்கு அவையிலிருந்த தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில், முதலமைச்சர் பேசி முடித்ததும் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியாளர்களின் ஒவ்வொரு ஊழலாக வெளியே வருவதைக் கண்டு இங்குள்ள பலர் நடுங்கிப் போயிருப்பதாகச் சாடினார். தங்களுக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளை மறுத்த அவர், “அவர்கள் தயவால்தான் நமது ஆட்சி நடப்பதாகப் புதிய ஆயுதம் ஒன்றை ஏவுகிறார்கள், ஆனால் இந்த ஆட்சி முழுக்க முழுக்க மக்கள் தயவால்தான் நடக்கிறது” என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும், தி.மு.க-வினர் தங்களது கூட்டணிக் கட்சிகளை அனுப்பி வைத்ததாகக் கூறுவதைக் குறிப்பிட்ட அவர், அப்படி அனுப்பி வைத்தவர்களுக்குத் தற்போதைய அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவு கொடுத்தது, அவர்கள் சுயச்சையாக எடுத்த முடிவு என்று முதலமைச்சர் தெளிவுபடுத்தினார். “மக்களுக்கு எல்லாம் நன்றாகப் புரியும், எல்லாவற்றையும் அவர்கள் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று முதலமைச்சர் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரது கடுமையான விமர்சனங்களைத் தாங்க முடியாமல் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இந்தச் சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
