2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதன் ஒரு பாகமாக ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீதம் வாக்காளர்களை பூத் கமிட்டி மூலமாக உறுப்பினராக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை இரண்டு மாதங்களில் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக.11,12-ல் ஸ்டாலின், கோவை, திருப்பூரில் ஆய்வு செய்ய இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைய வேண்டும். நம் மண், மொழி, மானம் காக்க “ஓரணியில் தமிழ்நாடு” என இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
