“மாப்ள அவர்தான்… ஆனா சட்டை என்னோடது”… எடப்பாடியை ‘டம்மி சாமி’ என வறுத்தெடுத்த அமைச்சர் இ.பெரியசாமி…..!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

அதிமுக அலுவலகத்தில் வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டதை எடப்பாடி பழனிசாமி ஒரு சாதனையாகக் கொண்டாடுவது வேடிக்கையானது என்று இ.பெரியசாமி சாடியுள்ளார். உண்மையில், அனைத்து முடிவுகளும் டெல்லியில் அமித்ஷாவால் எடுக்கப்பட்டு, எழுதிக் கொடுக்கப்பட்ட கணக்கை வாசிக்கும் ஒரு ‘அறிவிப்பாளர்’ வேலையை மட்டுமே பழனிசாமி செய்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். அமித்ஷாவைச் சந்திக்க நான்கு முறை டெல்லிக்குச் சென்ற பழனிசாமி, அங்குப் பணிந்து நின்றவிட்டு தற்போது சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தானதை ஒரு வெற்றியாகக் காட்டுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பால் வந்தவை அல்ல, மாறாக அவை பாஜகவின் மிரட்டலால் இணைந்தவை என்று பெரியசாமி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஓராண்டாக ‘பிரமாண்டக் கூட்டணி’ அமையும் என்று கூறி வந்த பழனிசாமியால், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளைக் கூடத் தக்கவைக்க முடியவில்லை. “பாஜகவே அதிமுகவை இயக்கும் சக்தியாக மாறிவிட்டது” என்றும், தொகுதிகள் ஒதுக்கீட்டில் பாஜகவின் கை ஓங்கியிருப்பதே இதற்குச் சாட்சி என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

   

குறிப்பாக, அதிமுகவின் அடையாளமான இரட்டை விரலைக் காட்டி அக்கட்சியின் தலைவர்கள் நின்ற இடத்தில், இன்று பாஜகவின் பியூஷ் கோயல் நின்று போஸ் கொடுப்பது அதிமுகவின் வீழ்ச்சியைக் காட்டுவதாகப் பெரியசாமி விமர்சித்துள்ளார். 2021 தேர்தலில் குறைவான வாக்கு சதவீதத்தைப் பெற்ற பாமக மற்றும் அமமுக போன்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதும், பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதும் அமித்ஷாவின் அழுத்தத்தினால் நடந்தவை என்று அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இருந்த தன்னாட்சி அதிகாரம் இன்று பறிபோய், அதிமுக அலுவலகம் டெல்லியின் கிளை அலுவலகம் போல மாறிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

   

இறுதியாக, இந்தத் தேர்தல் என்பது ‘தமிழ்நாடு அணியா அல்லது டெல்லி அணியா’ என்பதற்கான போர் என்று அவர் வர்ணித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் நிதிப்பகிருக்காகவும் வாய் திறக்காத பழனிசாமி, தனது அரசியல் பிழைப்பிற்காக டெல்லிக்கு ஓடோடிச் செல்வதைத் தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். வரும் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, டெல்லி ஆதிக்கத்தை முறியடிக்கும் என்று இ.பெரியசாமி தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.