தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இதனிடையே குடியாத்தத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது தேர்தல் வர இருப்பதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமை தொகை கொடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
பெண்களின் கஷ்டத்தை பார்த்து அவர் கொடுக்கவில்லை. அதிமுக அழுத்தத்தை பார்த்தும் தேர்தல் காரணமாகவும் வழங்குகின்றார். திமுகவை பொருத்தவரை வாங்கி தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை. கொரோனா காலத்தில் பிரதமர் மோடியே பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்தோம். திமுக 5 ஆண்டில் 5,38,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். நாம்தான் அதை கட்ட வேண்டும். 73 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இந்த கடனை விட திமுக அரசின் கடன் சுமை அதிகம்.
எப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆட்சி செய்வது திமுக, நிதி வாங்கி கொடுத்தது அதிமுக. மக்களை ஏமாற்றுவதில் திமுக கைதேர்ந்தவர்கள். காலம் போன கடைசியில் வென்டிலேட்டரில் திமுக ஆட்சி உள்ளது. மக்கள் கைவிட்டால் திமுக ஆட்சி கிளோஸ். இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலும் ஊழல் செய்வதிலும் முதல் மாநிலமாக தமிழகம் என்றுதான் திமுக பெயர் வாங்கி வைத்துள்ளது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
