திருப்பூர் அருகே பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் ஆளும் கட்சியினர் மத்தியில் வெடித்த கோஷ்டி மோதலால் முதல்வர் படம் இடம்பெற்ற பேனரை நிர்வாகி கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அருகே காட்டூரில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த பேனரில் முதல்வர், துணை முதல்வர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அப்பகுதி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் படம் இடம்பெற்றிருந்தது.
ஆனால் மாவட்ட அமைச்சர்களான சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோரின் படம் இடம்பெறவில்லை. இந்த பேனரை பார்த்த திமுக மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், பேனரில் வடக்கு ஒன்றிய செயலாளர் படம் எதற்காக, தெற்கு ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ளது என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் பேனரை கிழித்து வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
