தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலின் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணம்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் நிதியா என்று திமுக ஐடி விங் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் ‘ஜான் பிரிட்டோ’ என்பவர் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக திமுக ஐடி விங் சாடியுள்ளது. ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் ‘போதை சக்தியாக’ மாறிவிட்டதா என்றும், ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த கறுப்புப் பணம்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா என்றும் அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மேலும், இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்ட பிறகும், பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌனம் காப்பது ஏன் என்றும், தேர்தலின் போது தவெக-வை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ இப்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, முதலமைச்சர் விஜய் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
