திருச்சியில் பயங்கரம்..! திமுக கவுன்சிலர் ரஞ்சித்குமார் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை..!!

By Soundarya on பங்குனி 31, 2026

Spread the love

திருச்சி மாவட்டம் கூத்தையப்பார் பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலரான ரஞ்சித்குமார் (38), திருவெறும்பூர் – நாவல்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மறைவிடத்தில் பதுங்கியிருந்த மர்ம கும்பல், அவர் வரும்போது திடீரென வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் அரங்கேறிய இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரஞ்சித்குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலைக்குக் காரணம் முன்விரோதமா அல்லது அரசியல் ரீதியான மோதலா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பட்டப்பகலில் மக்கள் பிரதிநிதி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.