“இனி இவங்க கூட கூட்டணியே வேண்டாம்”…. ஸ்டாலின் கையில் ‘அந்த’ ரகசிய அறிக்கை… தூக்கத்தை இழந்த சீனியர்கள்… அனல் பறக்கும் அறிவாலயம்….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த 38 பேர் கொண்ட கள ஆய்வு குழு, தனது இறுதி அறிக்கையை நாளை அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்கிறது. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை ரகசியமாகக் கேட்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தாக ஒரு முக்கிய விஷயம் முன்வைக்கப்பட்டிருப்பது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

கள ஆய்வின்போது திமுகவினர் தங்களது அனல் பறக்கும் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் கொட்டியுள்ளனர். பல இடங்களில் கூட்டணி கட்சிகள் திமுகவின் வெற்றிக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்றும், மாறாக அவர்கள் திமுகவின் பலத்தை மட்டுமே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அவர்களால் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் விளைவாக, கூட்டணி தர்மத்தை விட கட்சியின் வளர்ச்சியே முக்கியம் எனக் கருதி, வரும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் திமுக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காண வேண்டும் என்று தங்களது விருப்பத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளனர். அப்போதுதான் கட்சியின் உண்மையான பலம் என்ன என்பது தெரியவரும் என்றும் அவர்கள் உற்சாகமாகத் தெரிவிக்கிறார்கள்.

   

அடிமட்ட தொண்டர்களின் இந்த மனக்குமுறலையும், பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பத்தையும் ஏற்று கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டங்களைத் தீட்டியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 78 அமைப்பு ரீதியான மாவட்டங்களை 117 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம், நிர்வாகப் பரவலாக்கல் செய்யப்படுவதோடு, அதிகப்படியான இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த விசுவாசிகளுக்கும் புதிய பதவிகளை வழங்கி உற்சாகப்படுத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த இறுதிக்கட்ட கள ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அதிரடி அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, உள்ளாட்சித் தேர்தலில் ‘தனித்துப் போட்டி’ என்ற வியூகத்தை திமுக தலைமை கையில் எடுத்தால், அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.