தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தேமுதிகவை தன் கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் திமுக ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக வட மாவட்டங்களில் பலமாக இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியை அதிமுக – பாமக கூட்டணி குறிவைக்கும் நிலையில், அதற்குப் போட்டியாக தேமுதிகவை களமிறக்கி வாக்குகளைச் சிதறடிக்க ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். கடந்த காலங்களில் பாமகவிற்கு மாற்றான வாக்குகளைப் பெறுவதில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வட மாவட்டங்களைப் பொறுத்தவரை பாமகவின் செல்வாக்கு அதிகம் இருந்தாலும், அங்குள்ள பிற சமூக மக்களின் வாக்குகளும், பாமகவிற்கு எதிரான வாக்குகளும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. திமுக ஏற்கனவே விசிகவுடன் கூட்டணியில் இருப்பதால், வன்னியர் சமூக வாக்குகளைப் பெறுவதில் சில சவால்கள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதைச் ஈடுகட்டவும், அதிமுக கூட்டணியின் பலத்தைக் குறைக்கவும் தேமுதிகவின் வட மாவட்ட செல்வாக்கை திமுக பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்கள் தனது அரசியல் பயணத்தை வட மாவட்டங்களான விருத்தாசலம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் இருந்தே தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பகுதிகளில் இன்றும் தேமுதிகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. சமீபத்தில் கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் திரண்ட கூட்டம், அக்கட்சிக்கு இன்னும் வட மாவட்டங்களில் செல்வாக்கு குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த வாக்குகளைத் தன் பக்கம் திருப்புவதன் மூலம் வடக்கில் அதிமுகவின் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியும் என திமுக நம்புகிறது.
இந்தக் கூட்டணியின் மூலம் வன்னியர் அல்லாத பிற சமூக வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் திமுக அறுவடை செய்யத் தயாராகிவிட்டது. அதேசமயம் பாமகவை கூட்டணிக்குள் சேர்க்காததன் மூலம் தனது தலித் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்ட திமுக, தேமுதிகவை இணைத்ததன் மூலம் ஒரு சமநிலையை உருவாக்கியுள்ளது. மொத்தத்தில், வட மாவட்ட தேர்தல் களத்தில் எடப்பாடி பழனிசாமியின் திட்டங்களை முறியடிக்க, தேமுதிகவை ஒரு துருப்புச் சீட்டாக திமுக தலைமை மிகச்சரியாகப் பயன்படுத்தியுள்ளது.
